தமிழ்ப்பாடநூல்களில் புணர்ச்சியிலக்கணம் (3-ஆம் பதிவு).
தமிழ்ப்பாடநூல்களில் புணர்ச்சியிலக்கணம் (3-ஆம் பதிவு). +2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் 149ஆம் பக்கத்திலுள்ள, "நாம் அணியும் உடை, உணவு, அரசியல் என எல்லாவற்றையுமே இன்று திரைப்படம்தான் தீர்மானிக்கிறது" என்ற தொடரைக்காண்போம். . 'என' என்பது இடைச்சொல்லாகும். இடைச்சொற்கள் தனித்து இயங்கா; பெயர், வினைச்சொற்களை இடனாக கொண்டு இயங்குமென்பது இலக்கணம். என, என்று, ஓடு என்னும் இம்மூன்று இடைச்சொற்களும் எண்ணப்படும் பொருள்தோறும் நிற்கும். சிலநேரங்களில் ஓரிடத்தில் நிலைத்துநின்று எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தும். எனவே 'என' என்னும் இடைச்சொல், 'அரசியல்' என்னும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து 'அரசியலென' என்றாகும். அரசியல் என்னும் பெயர்ச்சொல்லின் ஈற்றில்நின்ற இடைச்சொல், அதற்கு முன்னுள்ள உடை, உணவு ஆகிய பெயர்ச்சொற்களுடனும் சென்று பொருந்தி உடையென, உணவென என்று பொருள்படும். இடைச்சொல் தனித்து இயங்காத என்பதை ஏன் மறந்தனர். நன்றி. வணக்கம்.