அண்ணாமலையூர்ப்புலவர்
"தலையாய நட்பு". பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழுக்குப்பெருமை சேர்ப்பன. எட்டுத்தொகை நூல்களுளொன்று புறநானூறு. புறப்பொருள் ஒழுகலாறுகளான பொருள், வீரம், ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படுத்தி, மக்களை நெறிப்படுத்தும் பாடல்கள் நானூறு தொகுக்கப்பெற்றதால் 'புறநானூறு' என்னும் பெயர்பெற்றது. இதன்கண் நற்கருத்தமைந்த அணிகலணான பாடலொன்றைச்சுவைப்போம்; கடைபிடிப்போம். பாடலின் பின்னணி வருமாறு: உறையூரை தலைநகரமாகக்கொண்டு கோப்பெருஞ்சோழன் ஆண்டு வந்தான். பாண்டியநாட்டில் 'பிசிராந்தையார்' என்னும் நற்றமிழ்ப்புலவர் வாழ்ந்து வந்தார். இருவரும் நேரில்காணாமலே நட்புறவு பூண்டிருந்தனர். யாது காரணத்தாலோ, இருவரும் ஒருவரையொருவர் நேர்காண இயலவில்லை. ஆயினும், உள்ளத்தால் ஒன்றி நட்பினை வளர்த்து வந்தனர். கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்க்கிடையே ஆட்சியுரிமைக்கான பூசல்கள் நேரிட்டன. மன்னன் மனம்வெறுத்து உயிர்நீங்க எண்ணி, வடக்கிருந்தான். தன்னாருயிர் நண்பர் பிசிராந்தையார் தன்னைக்காண வருவார் என்று உறுதிகொண்ட மன்னன், அவர்க்கு தம்மருகில் ஓரிருக்கை அமைத்தான். உள்ளுணர்வு தூண்டப்பெற்ற பிசிராந்தையார், தன்நண்பனாம் மன்ன...